சிவப்பரம்பொருள்- 3
சாந்தா வரதராஜன்
varadshantha@yahoo.com
பிரமன் அன்னமாக மாறி வானிலே பறந்து சென்றார்.மாதவன் பன்றியாக உருவெடுத்து பூமியைப் பிளந்து கொண்டு சென்றார். போகப் போக முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போயிற்று; ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல; ஆயிரம் ஆண்டுகள் இருவரும் தங்கள் முயற்சியைக் கை விடாது மேற்கொண்டு அடியையோ, முடியையோ காணமுடியவில்லை. அவர்கள் மிகவும் களைத்து உடல் சோர்ந்து விட்டனர். இனியும் மேலே செல்ல முடியாது என்று தோன்றியதும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தனர்.
இதுவரை அவர்களிடம் குடி கொண்டிருந்த ஆணவம் அகன்றுவிட்டது. தாங்களே முதல்வர் என்றும் தங்களுக்கு மிஞ்சியவர் யாருமில்லைஎன்ரும் அவர்கள் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பதை உணர்ந்தனர். அவர்களுக்கும் மேலான ஒரு பொருள் இருப்பதை அவர்கள் கண் கூடாகக் கண்டனர். இருவரும் கை கூப்பி அனற்பிழம்பாக நிற்கும் அப்பொருளை நமஸ்கரிதனர். "அடிமுடி கானாப்பொருளே, தாங்கள் யார் என்பதை எங்களுக்கு உணர்த்த வேண்டும்"என்று பிரார்த்தித்தனர். அப்போது அண்டம் கிடுகிடுக்கப் பேரொலி ஒன்று எழுந்தது. அவ்வொலி அடங்கியபோது ஈசானம், தத்புருஷம்,அகோரம்,வாமதேவம்,சத்யோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் சடையிலே பிறைச் சந்திரன் தன் கதிர் ஒளி வீச, கையிலே மானும், மழுவும், தாங்கியவாறு ஈசன் அவர்களுக்குத் தரிசனம் கொடுத்தார். அதைக் கண்டதும் இவருடைய மேனியும் புளகாங்கிதம் அடைந்து, நெடுஞ்சாண் கிடையாகத் தரையிலே விழுந்து பரம் பொருளை நமஸ்கரிதனர்.
அவர்களுடைய மேனி நடுங்கியது. கண்களிலிருந்து நீர்பெருக்கெடுத்து வழிந்தது. நெஞ்சம் பக்தியால் தழுதழுத்தது. கைகள் கூப்பி அவரை வணங்கினர். கானக்கிடைதர்கரிய பரம்பொருளே, கேடின்றி உயர்ந்த பரஞ்சுடரே, கடலில் எழுந்த 'விடம்' உண்டு எம்மைக் காத்த பெருமானே, படைத்தும், அழித்தும், கடைநாளில் எவ்வுலகும் பாழ்பட்டு ஒழியத் துடைத்தும் விளையாடுகின்ற ஈசனே, உம்மைப் போற்றி வணங்குகின்றோம். பிறை சூடிய பெருமானை, அரிய தவம் இயற்றும் அன்பர்களுக்கு அருளும் அருட்கடலே, கங்கையைத் தாங்கிய கருணாகரனே, உம்மை அடி பணிந்து வணங்குகின்றோம். அரியனாய், நான் மறைக் கொழுந்தாய், அமலமாய், அழிவின்றி எரியும் கனலாய், கதிர்ச்சுடராய், உருவாய், அருவாய், சின்மயமாய், உள்ளும் புறமும் உணர்வரிய துரியதீதமாய் நின்ற அருட்பெரும்கடலே, உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம் என்று இருவரும் ரோமாஞ்சனம் கொண்டவர்களாய்த் துதித்தனர்.
தொடரும்
HAVE A NICE DAY
HAVE A NICE DAY
HAVE A NICE DAY