ஊன்றுகோல்
திருமதி சாந்தா வரதராஜன்
நல்லோர்கள் செயலெல்லாம்
மனிதம் காக்கும் ஊன்று கோல்
நாட்டைக்காக்கும் தொண்டுகள்
நமக்குதவும் ஊன்று கோல்
அல்லும் பகலும் உழைப்பவர்
பொது நலத்தின் ஊன்று கோல்
அறிவைப்பெருக்கும் ஆசான்
மூடம் போக்கும் ஊன்று கோல்
வல்லோர்கள் கரங்களெல்லாம்
நன்மைக்கு ஊன்று கோல்
வாழக்கை முடிந்த பின்னே
நாலுபேர்கள் ஊன்று கோல்
எல்லோர்க்கும் ஓர் நாள்
கடைசிப் பிடி ஊன்று கோல்
எழைநலம் பேணுவோர்கள்
பூமித்தாயின் ஊன்று கோல்
திக்கற்ற உயிர்களுக்கு
தெய்வமே ஊன்று கோல்
திசையற்ற வாழ்க்கைக்கு
நம்பிக்கையே ஊன்று கோல்
தக்கவழி நடப்பதற்கு
கல்வியே ஊன்று கோல்
தன்னையறிந்து வாழ்வதற்கு
தன்பலமே ஊன்று கோல்
சிக்கலில் தவிப்பவர்க்கு
சிந்தனையே ஊன்று கோல்
சிறப்புடன் நாடுகாண
பொது நலமே ஊன்று கோல்
துக்கமுள்ள நெஞ்சுக்கு
அமைதியே ஊன்று கோல்
தூயவழி போவதற்கு
அன்பொன்றே ஊன்று கோல்
சுபம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments